ரெய்டு நடத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட மாஜி தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு மீண்டும் பதவி!
30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுக்களை ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட பின்னர் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டது.
சென்னை: முன்னாள் தலைமை செயளாலர் ராமமோகன் ராவிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தமிழக அரசின் தொழில் முனைவோர் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ், கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி அவருடைய வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அதில் 30 லட்சம் ரூபாய்க்கான புதிய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது, இதற்காக அவரிடம் இருந்த தலைமை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் தான் இன்னும் தலைமைச் செயலாளர் தான் என்று செய்தியாளர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது, தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளராக இருந்த ராஜாராம் நில நிர்வாக துறையின் முதன்மை செயல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.