"புரட்சி தலைவி அம்மாவிடம் பயிற்சி பெற்றவன்.." சொல்வது ராமமோகன ராவ் 'ஐ.ஏ.எஸ்'!
புரட்சி தலைவி அம்மாவிடம் பயிற்சி பெற்றேன் என கூறி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ்.
சென்னை: "புரட்சி தலைவி அம்மாவிடம் பயிற்சி எடுத்தவன்.." என்று கூறியுள்ளதன் மூலம், ஒரு அரசு அதிகாரியாக இன்றி தேர்ந்தெடுத்த அரசியல்வாதியை போல பேசியுள்ளார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்.
ஐடி ரெய்டுக்கு உட்படுத்தப்பட்ட ராம மோகனராவ் இன்று அளித்த பேட்டியின் நடுவே ஆங்காங்கு, ஜெயலலிதா பெயரை கூறியதன் மூலம், எதிர்தரப்புக்கு ஒரு மெசேஜ் கொடுக்க நினைத்தார் என்பது புரிந்தது.
உதாரணத்திற்கு "என்னை புரட்சி தலைவி அம்மா ஸ்பான்சர் செய்தார், வளர்த்தார்" என்று பேட்டியில் குறிப்பிட்டார் ராமமோகன ராவ்.
ஐ.ஏ.எஸ் பயிற்சி என்னவானது
ஐஏஎஸ் பயிற்சி பெற்று இந்திய குடிமை பணியாளராக பொறுப்புக்கு வந்த அதிகாரி, தன்னை ஒரு தனிப்பட்ட நபர் வளர்த்தார் என்று கூறுவது அவரது நேர்மையை, பணி அர்ப்பணிப்பை கேள்வி கேட்கும் செயலாகும். மேலும் மக்களின் வரிப் பணத்தில் அவர் பெற்ற பயிற்சியை குறைத்து மதிப்பிடுவது போலாகும். ஜெயலலிதாவிடம் பணியாற்றாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தகுதியில்லாதவர்கள் என கூறவந்தாரா ராம மோகன ராவ்?
கோழையில்லை
மேலும் அதிமுகவினரே இப்போதெல்லாம் மறந்துவிட்ட "அம்மா" கோஷத்தை எடுத்து அவர்களுக்கே போட்டியாளராக காட்சியளித்தார் ராமமோகன ராவ். நிருபரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த ராமமோகனராவ், "உங்கள் கேள்வி அனைத்தைக்கும் பதில் சொல்வேன். நான் ஒன்றும் கோழை கிடையாது. நான் மேடமிடம் பயிற்சி பெற்றவன்" என்று 'கர்ஜித்தார்'. அவர் அடுத்ததாக கூறியது இன்னும் விஷேசம்.
தொடர் பயிற்சி
நான் மேடமிடம் பெற்றது, ஒருநாள் பயிற்சி கிடையாது. செங்கல்பட்டு கலெக்டராக 1994ல் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே பயிற்சிபெற்றேன். அவர் என்னை தலைமைச் செயலாளராக மாற்றினார்" என்றெல்லாம் தெரிவித்தார் அவர்.
தமிழிசை கோபம்
இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றதாக கூறி இவர் செய்த ஊழல்களுக்கு ஜெயலலிதா பெயரையும் இழுத்துவிட்டு அவமானப்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டினார். ஜெயலலிதா பெயரை சொல்லி மாநில அரசை மிரட்டிப் பார்க்கிறாரா என்ற சந்தேகம் ஒருபக்கம் அதிமுகவினரிடம் எழுந்துள்ளது. கடந்த "7 மாதங்களாக நான் எந்த தப்பும் செய்தேனா. நான் மேடம் சொன்னபடிதான் நடந்துகொண்டேன்" என்றும் தனது பேட்டியில் அவர் கூறியது கவனிக்கத்தக்கது.
சேலம் கலெக்டர்
சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் ஒருமுறை, 'அம்மா உத்தரவுப்படி மழை பெய்தது' என கூறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் மாநில தலைமைச் செயலாளர் அந்தஸ்திலுள்ள ஒருவரே ஆட்சியாளர் பற்றி தனிப்பட்ட முறையில் புகழ்ந்துரைப்பது அவரது நேர்மையை மேலும் சந்தேகிக்க செய்வதாக உள்ளது.