ரம்ஜான் விடுமுறையில் சோகம்.. கடலில் குளித்த அண்ணன்-தம்பி அலையில் சிக்கி பலி
தூத்துக்குடி: நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளித்த அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கோமால் தெருவை சேர்ந்தவர் ரீபாய்தீன். இவரது மகன்கள் அகமது, சாலிக். அதில் அகமது தனியார் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சாலிக் காயல்பட்டிணத்தில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ரம்ஜான் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாட விரும்பினர். இதையடுத்து மாலை அமகது, சாலிக் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரில் சுற்றுலா தலமான மணப்பாடு கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலை அகமது மற்றும் சாலிக்கை இழுத்து சென்றது. இதனால் பதறிய அவர்களது நண்பர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு அப்பகுதி மீனவர்கள் விரைந்து வந்து இரண்டு பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் அகமது உயிர் பிரிந்து விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குலசேகரப்பட்டிணம் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாலிக்கை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவரும் உயிர் இழந்தார். இதையடுத்து இவருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புனித நாளில் அண்ணன்-தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.