தேசிய கீதத்தின் போது தியானம் செய்ய தோன்றவில்லையா?.. விஜயேந்திரருக்கு ராமதாஸ் கேள்வி!
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
தமிழக அரசின் சட்டப்படி இது குற்றமாகும். விஜயேந்திரரின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்டணம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்றுள்ளார். இந்த சம்பவத்தில் வருத்தம் தெரிவிக்கும்படி விஜயேந்திரருக்கு ராமதாஸ் அறிக்கைவிட்டு இருக்கிறார்.
விஜயேந்திரர் விளக்கம்
இந்த விவகாரத்தில் காஞ்சி மடத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் விஜயேந்திரர் தியானம் செய்த காரணத்தினாலேயே எழுந்து நிற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்த்தாய வாழ்த்திற்கு
சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் வழக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
கண்டனம்
தற்போது இதற்கு எதிராக ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ''காஞ்சி மடத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்தின் போது தியானம் செய்ததாக விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் தேசியகீதம் இசைக்கப்படும்போது தியானம் செய்யாமல் இருந்தது ஏன். அப்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் நின்றார்
மேலும் ''ஆளுநர் தமிழர் இல்லை என்றாலும் அவர் எழுந்து நின்றார். சாலமன் பாப்பையாவும், ஆளுநரும் அதிக வயது கொண்டவர்கள். அப்போது கூட அவர்கள் எழுந்து நின்றார்கள். இந்த நிலையில் விஜயேந்திரர் தியானம் செய்தார் என்பதை எப்படி ஏற்க முடியும்'' என்று கேட்டுள்ளார்.
வருத்தம்
மேலும் ''விஜயேந்திரர் அவருடைய செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். பல அரங்குகளில் பல நடைமுறைகள் இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டும். விஜயேந்திரர் இனியாவது தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.