பார் உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதா? ராமதாஸ் கேள்வி...
சென்னை : 'பார் உரிமையாளர்கள் சார்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆஜராகி வாதிட்டது தவறு' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட மரபு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
கேரளாவில், பார்கள் மூடப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பார் உரிமையாளர் சார்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஒருவர், பார் உரிமையாளர்களுக்காக வாதிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசிலோ, மாநில அரசிலோ, தலைமை வழக்கறிஞராக இருப்பவர்கள், தனிநபர்களுக்காக வாதிடுவதற்கு, சட்டப்படி தடையில்லை.
ஆனால், அவ்வாறு வாதிடுவது, தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அரசு வழக்கறிஞர் தனிநபர்களுக்காக ஆஜராவதில்லை என்ற மரபு, 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010 ல், கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற, லாட்டரி ஊழல் வழக்கின் விசாரணைக்காக குற்றம் சாற்றப்பட்டவர் சார்பில், அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
அதற்கு கேரள அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி, இதில் தலையிட்டு, 'அந்த வழக்கில், ராமன் ஆஜராக மாட்டார்' என, அறிவித்தார்; அதனால், சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருக்கும் முகுல் ரோஹத்கிக்கு, இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் உள்ள அவர், எப்படி பொதுநலனுக்கு எதிராக ஆஜராகி வாதிட்டார் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு, தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.