காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பது நாடகம்- ராமதாஸ்
காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பது நாடகம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்: காவிரிக்காக அதிமுக உண்ணாவிரம் இருப்பது நாடகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக நிச்சயம் மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்று தமிழக மக்கள் நினைத்தனர். ஆனால் தமிழக பாஜகவினரோ இன்னும் நேரம் இருக்கு, அதுக்குள்ள என்ன அவசரம் என்று கூறிய நிலையில் நேற்று காலக்கெடு முடிந்ததுதான் மிச்சம்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கூறுகையில், காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பதாக கூறுவது நாடகம்.
இவர்கள் நடத்தும் உண்ணாவிரத நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார். காவிரிக்காக ஈரோடு, வேலூரில் பாமகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தி நகரில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் வீட்டிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.