சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தமிழை அழித்து சமஸ்கிருதத்தை வளர்க்கப் பார்க்கிறது : ராமதாஸ் காட்டம்
சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தமிழை அழித்து தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை வளர்க்கப்பார்க்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.ஐ.டி நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவன விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.
ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.,யில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் தமிழை அழித்து சமஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் ஐ.ஐ.டி நிர்வாகம் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஐ.ஐ.டி உடனடியாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதை உடனடியாக கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.