ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு... ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவதற்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இயக்கப்படும் தொடர் வண்டிகளில் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி வகைப் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை- மதுரை இடையிலான பாண்டியன் அதிவிரைவுத் தொடர் வண்டியில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இப்பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதிக இருக்கைகள்...
இந்த பெட்டிகள் வழக்கமான பெட்டிகளை விட அதிக இருக்கைகளும், நீளமும் கொண்டவை என்பதால், ஒரு தொடர்வண்டியில் வழக்கமான 24 பெட்டிகளுக்கு பதில் 22 பெட்டிகளை மட்டுமே இணைக்க முடியும். அதனால் பாண்டியன் விரைவு வண்டியில் இருந்த 4 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டு விட்டது.
கூடுதல் பயணிகள்...
இவற்றில் மகளிருக்கான பெட்டியும், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் வசதி கொண்ட பெட்டியும் அடங்கும். வழக்கமாக ஒரு பெட்டியில் 90 பேர் வீதம் 4 பெட்டிகளில் 360 பேர் பயணிக்க முடியும். இவர்கள் தவிர மேலும் பலர் இப்பெட்டியில் பயணம் செய்வார்கள்.
நெரிசல்..
ஆனால், இப்போது ஒரு பெட்டிக்கு 100 பேர் வீதம் இரு பெட்டிகளில் 200 பேர் மட்டுமே பயணிக்க முடிகிறது. மகளிருக்கென தனிப் பெட்டி இல்லாததால் அவர்கள் ஆண்களுடன் நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது. அதேபோல், சென்னை மங்களூர் விரைவு வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டு விட்டது.
எல்.எச்.பி. பெட்டிகள்...
சென்னை-திருச்சி இடையிலான மலைக்கோட்டை விரைவுத் தொடர்வண்டியில் இன்று முதல் எல்.எச்.பி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதனால் அத்தொடர்வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாக குறைக்கப்படுகிறது.
வரவேற்கக்கூடிய ஒன்றுதான்...
அதிக இடவசதி உள்ளிட்ட சொகுசு அம்சங்கள் கொண்ட எல்.எச்.பி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். அதேநேரத்தில், அதனால் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை தொடர்வண்டித்துறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
இது அநீதி...
ஒரு தொடர்வண்டியில் முன்பதிவு பெட்டிகள் 10 இருந்தால் ஒரு பெட்டிக்கு 72 படுக்கைகள் வீதம் மொத்தம் 720 படுக்கைகள் இருக்கும். அவற்றுக்கு பதில் புதிய வகை பெட்டிகளை இணைக்கும்போது, ஒரு பெட்டியில் 80 படுக்கை இருக்கும் என்பதால் 9 பெட்டிகளை இணைத்தாலே போதுமானது. அவ்வாறு செய்யாமல் ஏழை மக்கள் பயணிக்கும் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது அநீதி.
ஏழைகள் பாவம்...
மொத்தம் 4000 எல்.எச்.பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் ஓடும் அனைத்து விரைவு வண்டிகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதனால் தமிழகத்தில் அனைத்து தொடர் வண்டிகளிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறையும். அதன்பின் ஏழைகளும் அதிக கட்டணம் செலுத்தி முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டியநிலை ஏற்படும்.
நடுத்தர மக்களுக்கு பாதிப்பு...
மற்றொருபுறம், கன்னியாகுமரி டெல்லி இடையிலான திருக்குறள் அதிவிரைவு வண்டி, சென்னை ஹைதராபாத் கச்சிகுடா விரைவுவண்டி, சென்னை மானாமதுரை சிலம்பு விரைவுவண்டி ஆகியவற்றில் முன்னறிவிப்பின்றி தலா ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
கட்டண உயர்வை ரத்து செய்க...
எனவே, அனைத்து தொடர்வண்டிகளிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ விரைவுவண்டிகளின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.