உதயசந்திரனை செயல்பட விடாமல் செய்வதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரமற்றச் செயலாளராக உதயசந்திரனை அரசு சிறை வைத்திருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து விவாதத்தில் பங்கேற்க வராமல் ஓடி ஒளிந்த அமைச்சர் செங்கோட்டையன், இப்போது உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைப்பதில் மட்டும் தனது வீரத்தைக் காட்டியிருக்கிறார் என்று கொந்தளித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், உதயச்சந்திரன் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக முழு அதிகாரத்துடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
'பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்கான பரிசாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தார். பொதுத் தேர்வுகளில் தர வரிசை ரத்து, புதிய பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பினரிடமும் பெறும் வரவேற்பைப் பெற்றன.
கல்வித்துறையில் சீர்திருத்தம்
அதையெல்லாம்விட ஊழலின் உறைவிடமாகத் திகழ்ந்த பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஊழல் செய்ய முடியாத நிலை உருவானதையடுத்து, அவரை இடமாற்றம் செய்யும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஈடுபட்டனர்.
அதிகாரி இடமாற்றம்
இம்மாதத் தொடக்கத்திலேயே அவரை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை அரசு தற்காலிகமாகக் கைவிட்டிருந்தது.
அதிகாரமற்ற அதிகாரி
உதயச்சந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை இப்போது ஓரளவு அடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக மாற்றியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மோசமான தண்டனை
புதிய பாடத்திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டதன் காரணமாக அவரை முழுமையாக இடமாற்றம் செய்யாமல், பாடத்திட்டப் பிரிவை மட்டும் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதைவிட மிக மோசமான தண்டனையும் அவமதிப்பும் ஆகும்.
எந்த பணியும் இல்லை
இது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது மிகப்பெரிய பணி என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர, அதில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு எந்தப் பணியும் இல்லை. பாடத்திட்டப் பணியையாவது உதயச்சந்திரன் முழுமையாக மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா என்றால் அதுவும் கிடையாது.
அதிகாரமற்ற செயலாளர்
அவர் முழுக்க முழுக்க பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், உதயச்சந்திரனை வேறு துறைக்கு அனுப்பி அங்கு அவர் சீர்திருத்தங்களைச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரைக் கல்வித்துறையில் அதிகாரமற்றச் செயலாளராக அரசு சிறை வைத்திருக்கிறது.
அமைச்சர் நியமனம்
பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரி அல்ல. அவர் மீது பல்வேறு குற்றச்சாற்றுகள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுவதற்காகவே இப்படி ஓர் அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருக்கிறது.
ஊழல் பினாமி அரசு
இத்தகைய நியமனத்தால் பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக சபீதா இருந்தபோது ஏற்பட்ட சீரழிவைவிட இன்னும் மோசமான சீரழிவுகளை அத்துறை சந்திக்கும். தங்களின் நோக்கம் சீர்திருத்தம் அல்ல... ஊழல்தான் என்பதை பினாமி அரசு நிரூபித்திருக்கிறது.
முழு அதிகாரம் வேண்டும்
பினாமி அடிமைக் கொள்ளையரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவை கல்வித்துறை சீர்திருத்தங்கள்தான். எனவே, பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் மக்களும் குரல் கொடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.