குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தி மற்றும் கொலைகளுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் : ராமதாஸ்
குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தி மற்றும் கொலைகளுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் பரவியதற்கும், அப்பாவி மக்கள் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டதற்கும் காவல்துறையின் அலட்சியமே காரணம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்ற மூதாட்டியை, அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
குழந்தைகள் கடத்தல் பீதி
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தையைக் கடத்த வந்தவராகக் கருதி அப்பகுதி மக்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து கொலை செய்துள்ளனர். அவரது உடலை அங்குள்ள பாலத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் அப்பாவிகள் பலர் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்ற ஐயத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்
மனித உரிமைகளையும், உயிர்களையும் மதிக்காத இத்தகைய செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் கடந்த சில வாரங்களாக வட மாவட்டங்களில் பரவி வரும் வதந்திகள் தான் காரணம் ஆகும். வட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைக் கடத்தல் கும்பல்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் குழந்தைகளை கடத்திச் செல்வதாகவும் பரவி வரும் வதந்திகளால் அச்சமடைந்த மக்கள், சந்தேகத்திற்கிடமான மனிதர்களைப் பார்த்தால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
நடவடிக்கை இல்லை
தமிழகத்தில் வேலை செய்வதற்காக வந்துள்ள வட மாநில இளைஞர்கள், திருநங்கைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தான் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தமிழக அரசும், காவல்துறையும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வட மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருப்பதாக வதந்திகள் பரவிய போதே, அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று யூகித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும்.
விழிப்பு உணர்வு ஏற்படுத்தவில்லை
தொடக்கத்தில் அப்பாவி மக்கள் சிலர் தாக்கப்பட்ட போதே, காவல்துறையினர் விழித்துக்கொண்டு, உள்ளூர் காவல்நிலையங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் மக்கள் மத்தியில் நிலவிய அச்சமும், பதற்றமும் விலகியிருக்கும். இத்தகைய கொடூரத் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் வட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.
வதந்திகள் தடுக்கப்பட வேண்டும்
இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் விழித்துக் கொண்டு வதந்திகள் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்து வோரும் தங்களின் சமூகக் கடமைகளை உணர்ந்து பொது அமைதியை குலைக்கும் எந்த செய்தியையும் பகிரக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உலகத்தர சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.