காஷ்மீர், உன்னாவ்,சூரத் சம்பவங்கள்: பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்: ராமதாஸ்
சென்னை : பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பார்த்தால், பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறதோ என்கிற ஐயம் எழுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்திர பிரதேசத்தில் மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏற்படுத்திய பாலியல் கொடூரம், சூரத்தில் பெண் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் என தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெளிவந்தபடி உள்ளன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சூரத் சிறுமி கொலை
மேலும் அந்த அறிக்கையில், காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன. இத்தகைய கொடுமைகள் உலகில் யாருக்கும் நிகழக்கூடாது. காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஜனவரி 10-ந் தேதி ஆசிபாவை அவளது நண்பன் ஒருவன் மூலம் சிலர் பிடித்து கடத்தினர். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு கொண்டு சென்ற அவர்கள் 8 நாட்கள் கோவிலில் வைத்திருந்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை படுகொலை செய்து அங்குள்ள புதரில் வீசியுள்ளனர்.
தொடர்ந்து கொலை மிரட்டல்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் காவல்துறை அதிகாரிகள். இவர்கள் ஆசிபாவின் குடும்பத்திற்கு உதவுவது போல நடித்தனர் என்பது தான் இன்னும் கொடுமையான விஷயம். இதில் கொடுமை என்ன வென்றால் ஆசிபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியதுதான். இப்போதும் ஆசிபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.
போலீஸார் விசாரணை
இந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடலை வீசி எறிந்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த சிறுமியை வெறியர்கள் 8 முதல் 10 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சூரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெயரும், அடையாளமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை சீரழித்துக் கொன்ற கயவர்களின் விவரமும் இன்னும் தெரியவில்லை.
உத்தர பிரதேச சம்பவம்
அந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்த சிறுமிக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கும் என்பதை உணரலாம். இதேபோன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வந்த சிறுமி ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாள்.
காவல்நிலையத்தில் கொடுமை
அவளை பிடித்து விசாரித்தபோதுதான் அச்சிறுமியை அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் ஷெங்கார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.மாறாக, சிறுமியின் தந்தையை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், காவல் நிலையத்திலேயே அடித்துக் கொன்று விட்டனர்.
பாதிக்கப்படும் பெண் குழந்தைகள்
இதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக வெடித்தது. அதன்பிறகு தான் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டிலும், பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹசீனா, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
உடனடி நடவடிக்கை தேவை
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.