காவிரி வழக்கு மீண்டும் "அ" விலிருந்து தொடங்கும்... முடிவு தெரியாது- ராமதாஸ் பொளேர்
காவிரி வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கும், ஆனால் முடிவு தெரியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கும், ஆனால் முடிவு தெரியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாமக சார்பில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அம்பத்தூரில் போராட்டம்
இந்த போராட்டத்தில் அன்புமணி தலைமையில் பி.ஆர். பாண்யடின் மற்றும் பாமகவினர் எழும்பூர் சாலையில் பேரணியாக வந்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். அதுபோல் சென்னை அம்பத்தூர் உழவர் சந்தையில் பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் நடத்தி வருகிறார்.
மே 3-இல் வரைவு திட்டம்
அப்போது ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்துக்கான உரிய நீரை பகிர்ந்து தர வேண்டும் என்பது நமது நிலை. மத்திய அரசு தாக்கல் மே 3-ந் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும்.
கோடை விடுமுறை
வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் மாநிலங்களுக்கு அனுப்ப உத்தரவிடும். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை வரும். மேலும் மேலும் 12-இல் கர்நாடகா தேர்தல் முடிவடையும்.
வழக்கு நாடகம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி அமர்வு வரும். அப்போது காவிரி வழக்கு மீண்டும் 'அ'னாவில் இருந்தே தொடங்கும்... முடிவு தெரியாது. காவிரி வழக்கில் நாடகம் நடத்துகிறார்கள் அதில் தொடர்புடையவர்கள் நடிகர்கள்.
அறவழி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அனைத்து போராட்டங்களுக்கும் பாமக ஆதரவு அளித்து வருகிறது. பாமகவின் போராட்டம் அறவழிப் போராட்டம் ஆகும்.
முழு அடைப்பு
தமிழகத்தில் எல்லோரும் சேர்ந்து போராடும் நிலை இல்லை. முழு அடைப்பு எனில் ஆளும் கட்சிதான் முதலில் வர வேண்டும். அனைத்து கட்சிகளும் இணைந்து போராடினால் காற்று கூட அசைந்திருக்காது.
பாமக போராட்டம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலிக்காதது போல அடித்துவிட்டு தமிழகத்தை வலிப்பது போல வயிற்றில் அடித்துள்ளது உச்சநீதிமன்றம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமும் துணை போயிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பாமக போராட்டம் தொடரும் என்றார் ராமதாஸ்.