பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து இப்படியே உயர்ந்தால், இந்தியப் பொருளாதாரம் சீர் குலையும்: ராமதாஸ்
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து இப்படியே உயர்ந்தால், இந்தியப் பொருளாதாரம் சீர் குலையும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : கர்நாடக தேர்தல் முடிவடைந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை இன்று காலை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 18 மற்றும் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை
கர்நாடக சட்ட பேரவைத் தேர்தல் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், 14ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எரி பொருள் விலைகளை உயர்த்தாத எண்ணெய் நிறுவனங்கள், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை விட அதிகமாக எரிபொருள் விலைகளை உயர்த்தி வருகிறது.
நியாயப்படுத்த முடியாது
எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 10 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.15 ரூபாயும், டீசல் விலை ரூ.13.66 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.36 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.
பொருளாதாரம் குலையும்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இப்போதைய விகிதங்கள் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.150 என்ற உச்சத்தை எட்டக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் நிலை குலைந்துவிடும். அது நல்லதல்ல.
வரிகள் ரத்து
2008-09 ஆம் ஆண்டில் இப்படி ஒரு நிலை ஏற்பட்ட போது, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரியும் பல மாநிலங்களில் குறைக்கப்பட்டது. இப்போதும் அதேபோல எரிபொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து ஏழை - நடுத்தர மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.