சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் முகவராக செயல்படும் முதல்வர்: ராமதாஸ்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் முகவராக செயல்படும் முதல்வர் என்று ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பதில் தமிழக முதல்வர் மத்திய அரசின் முகவராகச் செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக நிலம் அளந்து கல் நடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும் தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டுவருகிறது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை- சேலம் இடையிலான பசுமைவழிச் சாலையால் தனியார் நிறுவனத்தை தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை. அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்.
15,000க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை கருத்தில் கொண்டுதான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, எதிர்ப்பு நிலவுகிறதா? என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதுகுறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாமே?
ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருக்கும் அகந்தையில் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என எடப்பாடி நினைத்தால் தோல்வியடைந்து விடுவார்.
மக்கள் நலனில் பழனிசாமி அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.