மக்கள் எழுச்சியால் மட்டும் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும்: ராமதாஸ்
மக்கள் எழுச்சியால் மட்டும் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தமிழகத்தை இனி மேல் மக்கள் எழுச்சியால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று பா.மக. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாக சூழல் மோசமாகிக்கொண்டே வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் நேரடி முதலீடுகள் பெருமளவு குறைந்து இருக்கிறது. இதற்கு திறமையற்ற ஆட்சியாளர்களே காரணம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கடந்த 2016-17ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள்காட்டி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2015-16ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.28,608 கோடி வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் இது ரூ.13,987 கோடியாக குறைந்துவிட்டது. இது முந்தைய ஆண்டின் வெளிநாட்டு முதலீட்டை விட 51.11 சதவீதம் குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அதே நேரத்தில் குஜராத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51.90 சதவீதமும், மராட்டிய மண்டலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு 106.40 சதவீதமும் அதிகரித்து உள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் குவிந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்து வகையான முதலீடுகளும் குறைந்து வருவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.
தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த கியா மகிழுந்து நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறுவதற்கும் கையூட்டு கேட்டு ஆட்சியாளர்கள் நெருக்கடி கொடுத்தது தான் காரணம் ஆகும்.
எனவே அனைத்து வகையிலும் மிக மோசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டியடிப்பதன் மூலம் மட்டுமே அனைத்து ஆபத்துகளிலிருந்தும் தமிழகத்தை காப்பாற்ற முடியும். அதுவே நமக்கு இருக்கும் ஒரே வழி என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.