5 ஆண்டுகளில் வறுமையால் 1,759 பேர் தற்கொலை... அதிமுக அரசுக்கு வெட்கமில்லை: ராமதாஸ்
சென்னை: பசியற்ற மாநிலம் என ஆளும்கட்சி புகழ் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1759 பேர் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலவசங்களை வழங்கினால் வறுமை ஒழிந்துவிடும் என்ற திராவிடக் கட்சிகளின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொள்கைகள் பயனளிக்காது என்பதை தான் அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவதாக கூறும் ராமதாஸ், பாமக ஆட்சிக்கு வந்தால் வறுமையில்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழாம் பொருத்தம்...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொல்லுக்கும், செயலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். நான்காண்டு ஆட்சி... நாலாபுற வளர்ச்சி என்று மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவை பாராட்டி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், மக்களின் வாழ்க்கை நிலை குறித்து கிடைக்கும் தகவல்கள் கவலையும், வேதனையும் அளிப்பவையாக உள்ளன.
வேலைவாய்ப்பின்மை...
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வேலைவாய்ப்பு கிடைக்காததால் மொத்தம் 1407 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெயலலிதா பதவியேற்ற முதல் ஆண்டிலேயே 358 பேர் வேலை கிடைக்காததால் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர். 2012 ஆம் ஆண்டில் 211 பேரும், 2013 ஆம் ஆண்டில் 226 பேரும், 2014 ஆம் ஆண்டில் 312 பேரும் வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் உத்தேசமாக 300 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வறுமை...
இன்னொரு புறம், கடந்த 5 ஆண்டுகளில் வறுமை காரணமாக 352 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டில் 81 பேரும், 2012 ஆம் ஆண்டில் 38 பேரும், 2013 ஆம் ஆண்டில் 58 பேரும், 2014 ஆம் ஆண்டில் 75 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது.
மக்கள் விரோத அரசு...
சுருக்கமாக கூற வேண்டுமானால் கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தால் மொத்தம் 1759 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஜெயலலிதா அரசோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது.
அவமானம்...
ஓர் ஆட்சிக் காலத்தில் வறுமை காரணமாகவோ அல்லது வேலைவாய்ப்பு இல்லாமலோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது அந்த ஒட்டுமொத்த நாட்டின் நிர்வாகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். ஆனால், வறுமைக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் சுமார் 2 ஆயிரம் பேரை பலி கொடுத்துள்ள தமிழக அரசு, அதை நினைத்து சிறிதும் வெட்கப்படாதது தமிழகத்தின் சாபக்கேடு. மேலும், வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தை மறைத்து தமிழகத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிவிட்டதைப் போன்று தன்னைத் தானே பாராட்டி விளம்பரம் கொடுத்து மகிழ்கிறார் ஜெயலலிதா.
நிம்மதிக்கான அளவீடுகள்...?
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா,‘‘நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்'' என்றார் பேரறிஞர் அண்ணா. ‘‘பசி, பிணி, பகை இல்லாதிருப்பது நல்ல நாடு'' என்றார் வான் புகழ் திருவள்ளுவர். இவர்களின் வாய்மொழிக்கு ஏற்ப கடந்த 56 மாதங்களாக எனது அரசு மக்கள் பணி ஆற்றி கொண்டிருக்கிறது'' என்று தற்புகழ்ச்சி பேசியிருக்கிறார். வறுமையும், வேலையின்மையும் நிலவுவது தான் பசி, பிணியற்ற மாநிலமா? இவை தான் நிம்மதிக்கான அளவீடுகளா? என்பதை ஜெயலலிதா தான் விளக்க வேண்டும்.
வேலைக்காக காத்திருப்போர்...
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் பேர் வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர். இவர்கள் அனைவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்ற போதிலும், சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுதல், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம். ஆனால், 110-ஆவது விதிப்படி அறிக்கை படிப்பதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத முதல்வர் ஜெயலலிதா, வேலைவாய்ப்பை பெருக்க எதையும் செய்யவில்லை. தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படவில்லை.
பாமக ஆட்சிக்கு வந்தால்...
இலவசங்களை வழங்கினால் வறுமை ஒழிந்துவிடும் என்ற திராவிடக் கட்சிகளின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொள்கைகள் பயனளிக்காது என்பதை தான் அதிர்ச்சியூட்டும் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டில் பா.ம.க. ஆட்சியமைத்த பின்னர் காலியாக உள்ள 5 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், சிறப்புக் கடன் திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை ஒழிக்கப்படும்; அதன்மூலம் வறுமையில்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என உறுதியளிக்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.