ஊழல்வாதி ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்டுவதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிக்காது : ராமதாஸ்
ஊழல்வாதிக்கு நினைவு மண்டபம் கட்டுவதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிக்காது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதலமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும், ஒரு ஊழல்வாதிக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுவதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஊழல்களை மறைக்க முடியாது
அந்த அறிக்கையில், எத்தனை வேள்விகள் நடத்தினாலும், எத்தனை பட்டுத்துணிகளைப் போட்டு மூடி வைத்தாலும் நினைவு மண்டபம் கட்டப்படும் ஜெயலலிதாவின் ஊழல்களையும், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது.
50 கோடியில் நினைவு மண்டபம்
ஜெயலலிதா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களுர் பரப்பண அக்கிரகார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருந்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் இதை பார்ப்பார்கள்.
தமிழகத்திற்கு தீராப்பழி
ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும். மக்களின் வரிப்பணத்தில் ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதையும், அதில் இரட்டை இலையை அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது.
அக்கறை காட்டாத அரசு
தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் பிரச்சினை என உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டாத பினாமி அரசு, ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக நினைவிடம் அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.
திட்டத்தை கைவிடவேண்டும்
முதலமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும் கூட ஊழல்வாதிக்கு, ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைப்பதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிப்பதில்லை. சட்டப்பேரவை மாடத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஆதரிக்கவில்லை. மாறாக, சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தான் கூறியிருந்தது. எனவே, வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.