மதுவைக் குடித்து கெட்டழியும் பெண்கள்... குடிகாரர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு “பர்ஸ்ட்”- ராமதாஸ்
சென்னை: நாட்டில் மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "2015-16 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையும், அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒப்பீட்டளவில் குறைவு:
இப்போது இது 0.40 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு தான் என்ற போதிலும், இது அதிகரித்து வரும் வேகம் மிகவும் ஆபத்தானது ஆகும். மதுவுக்கு பெண்கள் அடிமையாவது இதே வேகத்தில் நீடித்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துவதை யாராலும் தடுக்க முடியாது.
குடிகாரர்கள் அதிகம்:
குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 14 மாவட்டங்களில் சதவிகித அடிப்படையில் குடிகாரர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 4&ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள திரிபுரா, அந்தமான், சிக்கிம் ஆகியவை சிறிய மாநிலங்கள் என்பதால், அதிக குடி அடிமைகளைக் கொண்ட பெரிய மாநிலம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலும் தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.
டாஸ்மாக்தான் காரணம்:
தமிழ்நாடு இத்தகைய குடிகார மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைகள் தான். 2002-03 ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் மது விற்பனையும், குடிக்கு அடிமையானோர் எண்ணிக்கையும் கட்டுக்குள் தான் இருந்தது.
ஒத்த நிலைப்பாட்டில் கட்சிகள்:
தமிழக அரசே மதுக்கடைகளை நடத்தத் தொடங்கிய பிறகு தான் இவை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தன. இவ்வாறாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளையே சாரும்.
தமிழகத்தின் சாபக்கேடு:
தமிழக நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் எதிரெதிரான நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் இந்த இரு கட்சிகளும் மக்களைக் கெடுக்கும் மதுவை விற்பனை செய்வதில் மட்டும் ஒத்த நிலைப்பாட்டை கடைபிடித்து வருவது தான் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.
பாமக வழிவகை செய்யும்:
எனவே, 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தின் மூலம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். அதன்மூலம் மதுவின் பிடியிலிருந்து மக்களை மீட்டு, அனைத்து குடும்பங்களிலும் அமைதியும், வளமும் நிலவ பாட்டாளி மக்கள் கட்சி வகை செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.