”ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்” - அனைத்து கட்சிகளிடமும் வாக்குறுதி பெற ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்கின்ற வாக்குறுதியை அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பெறவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பதற்காக 8 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும்; ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று உறுதியேற்கும்படி கட்சிகளையும், வேட்பாளர்களையும் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
ஓட்டுக்கு பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கூறியுள்ள யோசனைகள் அனைத்தும் பா.ம.க. தொடர்ந்து முன்வைத்து வரும் யோசனைகள் தான். ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என உறுதிமொழி வழங்கும்படி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நான் பல முறை அறிவுரை வழங்கியுள்ளேன். சில முறை சவால்கள் விடுத்துள்ளேன். ஆனால், அத்தகைய வாக்குறுதியை அளிக்க இக்கட்சிகள் முன்வரவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இரு கட்சிகளிடமிருந்து இப்படி ஓர் உறுதிமொழியை வாங்கும் என்று நம்புகிறேன்.
வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை தானாக முன்வந்து வழங்கியிருக்கிறது. இதற்கான உறுதிமொழியை ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் எழுத்து வடிவிலும் வழங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளிடமும் இத்தகைய உறுதிமொழி வாங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் இப்போது கூறியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க. வழங்கும்.
இதேபோல் , மற்ற கட்சிகளிடமிருந்தும் இத்தகைய உறுதிமொழியை ஆணையம் பெற்று, அவற்றை சுவரொட்டிகளாக மாற்றி மக்கள் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி வளாகத்திலும் அதிக எண்ணிக்கையில் ஒட்ட வேண்டும். அப்போது தான் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணமும் வாக்காளர்களிடம் ஏற்படும்.
எனவே, பண பலத்தைக் தடுப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஜைதி அறிவித்த 8 அம்ச திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதுடன், ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியையும் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பெறவேண்டும். இத்தனைக்கு பிறகும் ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்த தொகுதியில் தேர்தலை ஒத்திவைப்பது, அக்கட்சியின் வெற்றி செல்லாது என அறிவிப்பது, கட்சின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் தயங்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.