மத்திய பட்ஜெட்: விவசாயம், சுகாதார அறிவிப்புகள் ஓகே; வரி அறிவிப்புகள் ஏமாற்றம்தான் - ராமதாஸ்
சென்னை: மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் சுகாதாரத்திற்கான திட்டங்கள் வரவேற்கும் வகையில் அமைந்தாலும் மக்களின் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தினை அளிக்கின்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2016&17 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ளார்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது போன்ற சில அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கும் போதிலும், ஒப்பீட்டளவில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மற்றும் ஊரக வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
பயனளிக்கும் திட்டங்கள்:
நாட்டில் சமத்துவத்தையும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வருமானம் உயர வேண்டும்:
அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த தற்போதைய அறிவிப்புகள் மட்டும் போதாது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வேளாண் திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாத நிலையில், புதிய திட்டங்கள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
வரிச்சலுகைகள் அவசியம்:
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சமூகத் துறைகளுக்கு கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக ரூபாய் 1,51,581 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இத்துறைகளில் மக்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற இந்த நிதி போதுமானதல்ல.
முதியோர் வரிச்சலுகை:
ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் 1 லட்சம் மருத்துவக் காப்பீடு, முதியோர் இருந்தால் ரூபாய் 30,000 கூடுதல் ஒதுக்கீடு, 3000 குறைந்த விலை மருந்துக்கடைகள் திறப்பு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதியை ஏற்படுத்துதல், டயாலிசிஸ் கட்டணத்தை குறைக்கும் வகையில் சில வரிச்சலுகைகள் ஆகிய அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.
வேலைவாய்ப்புத் திறன்:
அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் பாராட்டத்தக்கது. இதன் மூலம் ஏழைப் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அரசு மற்றும் தனியார் துறையில் 20 உயர்கல்வி நிறுவனங்களை உயர்கல்வி நிறுவனங்களாக உயர்த்த நடவடிக்கை, உயர்கல்விக்கு நிதி உதவி வழங்க ரூபாய் 1000 கோடியில் நிதியம் ஆகியவை போதுமானவை அல்ல என்ற போதிலும் நல்ல தொடக்கம் ஆகும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை வளர்க்கும் நோக்குடன் 1500 திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட இருப்பதும் நல்ல முன்முயற்சி ஆகும்.
ஏமாற்றம் அளிக்கும் வரி:
வரி சார்ந்த அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு சில சலுகைகளை அறிவித்து விட்டு, உச்சவரம்பை அதிகரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.