டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது.. ராமதாஸ் அதிருப்தி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நடத்துவது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப் 2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டு அதை பின்னர் முறைகேடாக நிரப்பி அதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் II-ஏ தேர்வுகளுக்கான நடைமுறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தேர்வு தான் நடந்த வந்தது ஆனால் இனிமேல் காலங்களில் முதல்நிலை (பரிலிம்ஸ்)மற்றும் முதன்மை (மெயின்ஸ்) கொண்ட இருநிலைகள் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 16, 2020
மேலும், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் (எந்த தேர்வாக இருந்தாலும் சரி ) கேட்கப்படும் மல்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் ''தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.