விஜயபாஸ்கர் மீது பட்டியலிட முடியாத அளவுக்கு புகார்கள்: உடனே பதவி நீக்கம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!
விஜயபாஸ்கரை உடடினயாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: விஜயபாஸ்கரை உடடினயாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரது வீடு, அலுவலகம், குவாரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்து ரெய்டுகளில் கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
குவியும் புகார்கள்
லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி என அடுக்கடுக்கான புகார்கள் அவர் மீது குவிந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ராமதாஸ் எதிர்ப்பு
இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளின் அடுத்தக்கட்டமாக அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. வருமானவரித்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது
எந்நேரமும் கைதாகலாம்
அதுமட்டுமின்றி, அடுத்தக்கட்ட விசாரணைக்காக வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அமைச்சர் என்பவர் அன்றாடம் கோட்டைக்கு வந்தும், மக்களை நேரில் சந்தித்தும் மக்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கருக்கோ வருமானவரித்துறை விசாரணைக்காக ஆஜராவது, அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள செல்வாக்கு படைத்தவர்களை சந்தித்து கெஞ்சுவது போன்ற பணிகளை செய்வதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கிறது. விசாரணையின் அடுத்தக்கட்டமாக விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும். இப்படிப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடிப்பது முறையல்ல.
பதவியிலிருந்து நீக்க வேண்டும்
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட புகார் மட்டுமல்ல... மேலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ராதாகிருஷ்ணன்நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது, மருத்துவமனைகளை மிரட்டி லஞ்சம் வாங்கியது, முதல்வரின் பொதுசுகாதாரத் திட்டத்தில் ஊழல் செய்தது என பட்டியலிட முடியாத அளவுக்கு புகார்கள் உள்ளன. எனவே, விஜயபாஸ்கர் இனியும் பதவி நீடிக்கக்கூடாது. உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.