20 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி தாது மணல், கிரானைட் ஊழல்... விசாரணை கோரும் ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் கடந்த 20 வருடமாகவே கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விரிவான விசாரணை தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் ராமதாஸின் அறிக்கை:
அனைத்து ஊழல்களையும் விஞ்சி விடும்
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் விஞ்சும் வகையில், தமிழ்நாட்டில் கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல்கள் தடையின்றி நடைபெற்று கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் பொருளாதாரத்தை சூறையாடி வரும் இந்த ஊழலுக்கு தமிழக அரசே ஆதரவளிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மதுரை மாவட்டத்தில்
மதுரை மாவட்டத்தில் பெருமளவில் கிரானைட் கொள்ளை நடப்பதாகவும், அதன் குறைந்தபட்ச மதிப்பு ரூ.16,000 கோடி இருக்கலாம் என்றும் 2012 ஆம் ஆண்டில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன்பிறகு தான் கிரானைட் ஊழல் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியவந்தன. ஆனால், கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன என்பதும், தமிழகத்தை ஆளும் அதிமுகவும், ஏற்கனவே ஆண்ட திமுகவும் இந்த இயற்கை வள கொள்ளைக்கு துணை நின்றதுடன், அதைப் பயன்படுத்தி பெருமளவு ஊழல் செய்தன என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
தனியாருக்குத் தாரை வார்த்த ஜெயலலிதா
தமிழ்நாட்டில் கிரானைட் வளம் அதிகம் இருப்பதால் அதை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனம்(டாமின்) கடந்த 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.1992 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனம் தான் கிரானைட் குவாரிகளை கையாண்டு வந்தது. 1992 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு தாரை வார்த்தார். அந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 கிரானைட் குவாரிகளுக்கான உரிமத்தை தனியாருக்கு வழங்கினார்.
இதுதான் ஊழலுக்கு அடித்தளம்
கிரானைட் ஊழலுக்கு இது தான் அடித்தளமாக அமைந்தது. தனியாருக்கு கிரானைட் குவாரி உரிமங்கள் வழங்கப்பட்டதில் ஜெயலலிதா அரசு மிகப்பெரிய அளவில் ஊழல் செய்ததாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. 1996 ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கிரானைட் உரிமம் வழங்குவதில் ரூ.39 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி, இ.ஆ.ப. அதிகாரி தியானேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டு, ஜெயலலிதா தவிர மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கு நீர்த்து போகச் செய்யப்பட்டது.
அனைவரும் தப்பினர்
குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாததால் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த அனைவரும் தப்பினர். ஊழல் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அவருக்கு மாநில அளவில் பதவியும் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் கிரானைட் குவாரி அதிபர்களின் அன்பான கவனிப்பும், உபசரிப்பும் தான் என்ற புகாரை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ரூ. 5 லட்சம் கோடி ஊழல்
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கிரானைட் நிறுவனம் நடத்தும் மதுரை தொழிலதிபரின் அதிகாரப்பூர்வ சொத்து மட்டும் ரூ.30,000 கோடி என்பதிலிருந்தே, அதிமுக, திமுக ஆதரவுடன் நடந்த கிரானைட் ஊழலில் முழு பரிமானத்தை புரிந்து கொள்ளமுடியும்.
ஊழலை ஊட்டி வளர்த்த திராவிடக் கட்சிகள்
தாது மணல் கொள்ளையை ஊக்குவித்ததும் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தான். 1989 ஆம் ஆண்டில் தாது மணல் கொள்ளையைத் தொடங்கிய வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு அரசியல் வேறுபாடு பாராமல் இரு கட்சிகளும் ஊக்கமளித்தன. இந்நிறுவன அதிபர் வைகுந்தராஜன், அதிமுக தலைமையுடன் வெளிப்படையாகவே வணிக உறவு வைத்திருக்கிறார்.
வைகுந்தராஜனின் பங்குகள்
ஆளுங்கட்சிக்கு சொந்தமான ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ் போன்ற நிறுவனங்களில் வைகுந்தராஜனுக்கு பங்குகள் உள்ளன. தாது மணல் கொள்ளை வழக்கு தொடர்பாக முந்தைய திமுக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டபோது, தமிழகத்தின் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காத, ஜெயலலிதா கொதித்தெழுந்து வைகுந்தராஜன் கைது பழிவாங்கும் நடவடிக்கை என குற்றஞ்சாற்றினார்.
சமரசம் காரணமாக விடுதலை
தாது மணல் கொள்ளை வழக்கில் 2007 ஆம் ஆண்டில் வைகுந்தராஜனை திமுக அரசு கைது செய்த போதிலும், அதன்பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட சமரசம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அவர் மீதான வழக்கு என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். தமிழகத்தில் நடைபெறும் கிரானைட், தாது மணல் உள்ளிட்ட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரும் மனுவை ஆளுனரிடம் மனு அளிக்கப்போவதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தேன்; அதன்படி17.08.2015 அன்று ஆளுனரிடம் ஊழல் குற்றச்சாட்டு பட்டியல் வழங்கப்பட்டது.
அமைதியாக இருக்கும் திமுக
இதேபோன்ற மனுவை ஆளுனர் மாளிகைக்கு பேரணி நடத்தி ஆளுனரிடம் வழங்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் கிரானைட், தாது மணல் ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை திமுக தாக்கல் செய்யவில்லை; அதற்கான காரணத்தையும் கூறவில்லை.
ஊழல்களுக்கு திமுகவும் உடந்தை
தமிழகக் கடலோரப்பகுதிகளில் இருந்து கடந்த 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் தாதுவை வி.வி.மினரல்ஸ் கொள்ளையடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஊழல்களுக்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே உடந்தை. இதுகுறித்து ஆளுனரிடம் பா.ம.க. அளித்த மனுவில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாற்றுகளை இரு கட்சிகளுமே மறுக்கவில்லை என்பதிலிருந்தே அக்குற்றச்சாற்றுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
விரிவான விசாரணை தேவை
தமிழகத்தின் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை தனியார் தடையின்றி கொள்ளையடிப்பதை அனுமதிக்கக்கூடாது. கிரானைட் ஊழல் குறித்து சகாயம் குழுவும், தாது மணல் ஊழல் குறித்து ககன்தீப்சிங் பேடி குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. எனினும், இவற்றின் விசாரணை வரம்பு மிகவும் குறுகியதாகும். எனவே, தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற தாது மணல், கிரானைட் ஊழல்கள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team -SIT) அமைத்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.