பெண்ணின் திருமண வயது 21 என்பதை உடனே சட்டமாக்குக - ராமதாஸ் வலியுறுத்தல்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பருவக்கோளாறு காரணமாக ஏற்படும் காதலால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யோசனை தெரிவித்திருக்கிறது.
நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, பெண்களின் நலனில் அக்கறை கொண்டு உயர் நீதிமன்றம் அளித்துள்ள இப்பரிந்துரை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான், பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துரையை அளித்திருக்கிறது.
காதல் நாடகத் திருமணங்களாலும், கடத்தல் திருமணங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் பெற்றோரும் அனுபவித்துவரும் வேதனைகளையும், மன உளைச்சலையும் உள்வாங்கி நீதிபதிகள் அளித்துள்ள பரிந்துரையும், தெரிவித்த கருத்துக்களும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாக அமைந்துள்ளன.
மொத்ததில், திருமண வயது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த பரிந்துரைகள் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரின் வயிற்றிலும் பால் வார்க்கும். இப்பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள். பெண்களின் திருமண வயது தொடர்பாக 12.5.2011 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் இதே கருத்து தான் வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனவே, திருமண வயது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக சட்டமாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.