வகுப்பறை கொலைகள்.. ராமதாஸ் யோசனைக்கு இந்து முன்னணி பாராட்டு
சமீபகாலமாக வகுப்பறைகளில் பள்ளி மாணவர்கள் கொல்லப் படுவது அதிகரித்து வருகிறது. இது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வகுப்பறைகளில் நீதிபோதனை வகுப்புகள் இல்லாததாலேயே இத்தகைய கொடூர சம்பவங்கள் நடைபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
எனவே, மீண்டும் வகுப்புகளில் நீதிபோதனை வகுப்புகளைத் தொடங்குவதன் மூலம் இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ராமதாசின் இந்த கருத்துக்கு இந்து முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாத கல்வியால் பயன் எதுவும் இல்லை. பள்ளிகளில் தொடரும் படுகொலைகளுக்கு காரணம், ஒழுக்கக்கேடும், வன்முறை எண்ணமும் தான். இதனை மாற்ற முன்பு இருந்த மாதிரி நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இந்து முன்னணி பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் மாணவ சமுதாயத்திடம் வன்முறை எண்ணத்தை விதைக்கும் காட்சிகளை தணிக்கைத்துறை கடுமையாக கண்காணித்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ந்து வரும் சமுதாயத்தை பற்றி தமிழக அரசு அதிக அக்கறை கொண்டு கல்வியில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.