புத்தாண்டிற்காக ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது: ராம.கோபாலன் கண்டனம்
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு வழிபாட்டுக்காக ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வலியுறுத்தியுள்ளார். மீறித்திறந்தால், அதனை எதிர்த்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு முடிவடைந்து நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதனையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், அவ்வாறு நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆடைக் கட்டுப்பாடு...
ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாட்டை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பொது இடங்களில் நாகரிகமாக உடை அணிவது பண்பாடு. ஆடைக்கட்டுப்பாட்டை அறநிலையத்துறை முழுமையாக நிறைவேற்ற, மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆகம விதிகளுக்கு புறம்பானது...
ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப்புத்தாண்டில் நள்ளிரவில் ஆலயங்களை வழிபாட்டிற்கு திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது. தனியார், அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களையும் நள்ளிரவில் திறக்கக்கூடாது என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கண்டனம்...
மார்கழி என்பதால் விடியற்காலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும். அப்போது குடும்பத்தோடு வந்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து நள்ளிரவில் கோவில் திறப்பது என்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆர்ப்பாட்டம்...
மீறித்திறந்தால் இந்து முன்னணி ஜனநாயக வழியில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 1-ந் தேதி நள்ளிரவில் இளைஞர்களும், இளம்பெண்களும் வீதியில் உலாவுவதை காவல்துறை தடுக்க வேண்டும்.
கைது செய்ய வேண்டும்...
குடித்துவிட்டு கும்மாளமிடுவதையும், வாகனம் ஓட்டுவதையும், பைக் ரேஸ் போன்ற ஆபத்தான விஷயங்கள் நடத்துவதும் சட்டவிரோதம் என எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும். மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.