ராமஜெயம் கொலை வழக்கு: நெருங்கும் கெடு... ரகசிய அறிக்கை தயாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் அவ்வப்போது பரபரப்பு எழுவதும் பின்னர் அப்படியே அமுங்கிப் போவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராமஜெயத்தின் உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டபோது குற்றவாளிகள் சிக்கிவிடுவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மீண்டும் கிணற்றில் போட்ட கல்லாக அமைதியாக உள்ளது ராமஜெயம் கொலை வழக்கு.
மூன்றாண்டுகளுக்கும் மேலாக ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காமல் குழப்பத்தில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அக்டோபர் 28ம் தேதிக்குள் மதுரை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி யார் என்று நிரூபிக்க வேண்டும் என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால், விஞ்ஞானப் பூர்வமாக அறிக்கை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமஜெயம் கொடூர கொலை
தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 50. கடந்த, 2012, மார்ச், 29ம் தேதி, கொடூரமாக கொல்லப்பட்டார். ஆசிட் ஊற்றப்பட்டு கட்டுக்கம்பிகளால் அவரது உடல் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்கி வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
11 பேருக்கு சிக்கல்
இவர்களில் சந்தேக வட்டத்திற்குள் வந்த குறிப்பிட்ட நபர்களை மட்டும் 3 வருட இடை வெளியில் விசாரித்தபோது சிலர் மாற்றி மாற்றி தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று கடந்த 3 வருடமாக சிலர் நடவடிக்கைகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்காணித்த போதும் சிலர் சந்தேக வட்டத்திற்குள் வந்துள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை
இந்த சந்தேக வட்டத்திற்குள் வந்த 11 பேரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனைபடி அறிவியல் ரீதியான விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் உட்படுத்த திட்டமிட்டுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனை எனப்படும் ‘நார்கோ அனாலிசிஸ்' என்ற பரிசோதனை 11 பேருக்கும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உண்மை கண்டறியும் சோதனை
முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதிவரை அவரது உதவியாளர்கள் நந்தகுமார், 'கேபிள்'மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு நாட்களாக, சென்னை, சி.பி.ஐ., அலுவலகத்தில், இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.
கட்டை விரல் மை
ராமஜெயத்தின் சொத்து தொடர்பான விஷயங்களை கவனித்து வந்த நந்தகுமாரிடம், கொல்லப்பட்ட ராமஜெயத்தின் கட்டை விரலில், பத்திரப்பதிவு ஆவண மை எப்படி வந்தது என்பது குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதேபோல், ராமஜெயம், கொல்லப்படுவதற்கு முன், யாருடைய பிரச்னையில் தலையிட்டார்; எதிரிகள் யார்; அவர்களுக்கு எதிராக ராமஜெயம் என்ன செய்தார் என்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
83 கேள்விகள்
ராமஜெயத்தின் மொபைல் போனில் இருந்து, அவரது மனைவி லதாவிடம், 'கட்டை' குரலில் பேசியவர் யார்; கொலையாளிகள் குறித்து, முன்னாள் அமைச்சர் நேருவுக்கு தெரியுமா என்பது குறித்து, 83 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கொலை வழக்கிற்கு ஆதாரமாக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை அக்டோபர் 28ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
முல்லைக்குடி சண்முகம்
இதனிடையே முன்னாள் சாராய வியாபாரியும், ராமஜெயத்தின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவருமான முல்லக்குடி சண்முகம் உள்ளிட்டோரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறி வருகின்றனர். இந்த சண்முகம் கூறும் தகவல்களும் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய குற்வாளிகளை கண்டறிய உதவியாக இருக்கும் என்பதால் விரைவில் சண்முகத்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.