ராமஜெயம் கொலை வழக்கு: நெருங்கும் கிளைமேக்ஸ்… சிக்கப்போவது யார்?
திருச்சி: மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த ராமஜெயம் கொலைவழக்கு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற விசாரணையில் மாற்றி மாற்றி பேசிய ராமஜெயத்தின் உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை யின்போது ராமஜெயம் உதவி யாளர்கள் சுமார் 89 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
உயர்நீதிமன்றம் கெடு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 21ம் தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கெடு விதித்தது.
சந்தேக லிஸ்ட்
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடைசிகட்ட முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்களில் சந்தேக வட்டத்திற்குள் வந்த குறிப்பிட்ட நபர்களை மட்டும் தகவல்களை மாற்றி மாற்றி கூறினர். இந்த சந்தேக வட்டத்திற்குள் வந்த 11 பேரை உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைபடி அறிவியல் ரீதியான விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் உட்படுத்த திட்டமிட்டனர்.
2 பேருக்கு சோதனை
இதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் முதற்கட்டமாக ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலைபார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
முக்கிய தகவல்கள் சிக்கின
இரண்டு நாட்களாக நடந்த இந்த சோதனை இன்று பிற்பகல் முடிவடைந்தது. இந்த சோதனையின்போது அவர்களிடம் ராமஜெயத்தின் நடவடிக்கைகள், அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 89 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில், கொலை வழக்கிற்கு ஆதாரமாக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விரிவான அறிக்கை
இச்சோதனையின்போது இருவரும் தெரிவித்த தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை, ஆய்வகத்தில் இருந்து ஓரிரு நாளில் சிடைத்துவிடும். இதன் பிறகு தேவைப்பட்டால் இவர்களிடம் மீண்டும் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. அடுத்தகட்ட விசாரணை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருங்கும் கிளைமேக்ஸ்
திருச்சி மாநகரின் மிகமுக்கிய அரசியல் புள்ளியான கே.என்.நேருவின் தம்பி ராமாஜெயம் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. 1200 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையில் கொலையாளிகளைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் அளித்த காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடிய உள்ளது. அதற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று தீவிர முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே கொலை வழக்கில் சிக்கி உருளப்போகும் தலை யாருடையது என்பதை அறிய ஒட்டு மொத்த தமிழகமே ஆவலாக உள்ளது.