ராமஜெயம் கொலை வழக்கில் துப்புக்கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசாம்!
முன்னாள் அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் துப்புக்கொடுப்பவர்கள் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் துப்புக்கொடுப்பவர்கள் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். 5 ஆண்டுகள் ஆகியும் ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
இதனால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
அதில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றர். அதில் உள்ள செல்போன் எண்களையும் சிலர் குறிப்பெடுத்து செல்வதையும் காணமுடிகிறது.