ராமஜெயம் கொலை வழக்கு: சி.பி.ஐ அலுவலகத்தில் நடந்த உண்மை கண்டறியும் சோதனை– துப்பு கிடைக்குமா?
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 2 பேரிடம் நேற்று சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதல் கொலை செய்யப்பட்டார். மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், 2012 ஜூன் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் உருப்படியாக எதுவும் கண்டறியப்படவில்லை.
உயர்நீதிமன்றம் கெடு
எனவே, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி போலீஸாருக்கு அக்டோபர் 21ம் தேதி வரை கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனை
குற்றவாளிகளை அதற்குள் கைது செய்துவிட சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமஜெயத்துக்கு நெருக்கமான 11 பேரை பட்டியலிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
3 பேரிடம் சோதனை
இவர்களில் முதற்கட்டமாக ராமஜெயத்தின் அலுவலக பணியாளர் நந்தகுமார், உதவியாளர் கேபிள் மோகன், முல்லைக்குடி சண்முகம் ஆகிய 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகேட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-6-ல் சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.
2 பேருக்கு அனுமதி
இவர்களில் கேபிள் மோகன், நந்தகுமார் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கேபிள் மோகன், நந்தகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார், சென்னைக்கு அழைத்துச் சென்று சாஸ்திரி பவன் வளாகத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
தீயாக பரவிய செய்தி
இதனையடுத்து ராமஜெயம் கொலைவழக்கில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியது. விசாரணையின் போது ஒவ்வொரு முறையும் வாக்குமூலத்தில் தெரிவித்த தகவல்களை மாறி மாறி கூறியதால் இவர்கள் இருவரிடமும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
சோதனை தொடரும்
ராம ஜெயம் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதால், இச்சோதனையின்போது இவர்களிடம் இருந்து ஏதாவது துப்பு கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கருதுகிறோம். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலரிடமும் இச்சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறியுள்ளனர்.
5 மணிநேரம் சோதனை
சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று கேபிள் மோகன் கூறியுள்ளார். நேற்று 5 மணி நேரத்துக்கு மேல் என்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். ஏற்கெனவே சில கேள்விகளை தயார் செய்து வைத்து, அதைக் கேட்டு என்னிடம் பதில் பெற்றுக்கொண்டனர். இன்றும் என்னிடம் இச்சோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார் கேபிள் மோகன்.
சிக்குவார்களா குற்றவாளிகள்
உண்மைக் கண்டறியும் சோதனையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை கைது செய்ய முடியும் என்பதால் சிபிசிஐடி போலீசார், சந்தேக வளையத்தில் உள்ளவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர்.