ராமஜெயம் கொலைவழக்கு... 2016ம் ஆண்டிலாவது குற்றவாளிகளை கண்டுபிடிக்குமா சிபிசிஐடி
மதுரை: ராமஜெயம் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் இரண்டு மாதகாலம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் இருந்து ராமஜெயத்தை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க திணறி வரும் சிபிசிஐடி போலீசார் 2016ம் ஆண்டிலாவது கொலையாளி யார் என்பதை அடையாளம் காட்டுவார்களா? அல்லது அவகாசம் கேட்டு காலத்தை கடத்தி விடுவார்களா என்று ராமஜெயத்தின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கிரானைட், ரியல் எஸ்டேட், விவசாயம், ஏற்றுமதி உட்பட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2012 மார்ச் 29 காலை நடைப்பயிற்சி சென்ற ராமஜெயம், திருச்சி சர்க்கார்பாளையம் ரோடு காவிரியாறு பகுதியில் சடலமாக மீட்கப் பட்டார்.
இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை 2012 ஜூன் 22 ல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியின் நிழலைக் கூட நெருங்க முடியாத நிலையில் அவகாசம் மட்டுமே கேட்டது சிபிசிஐடி போலீஸ். இந்நிலையில், கொலை நடந்து பல மாதங்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும் எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் மனைவி லதா மனுத்தாக்கல் செய்தார்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது.
சிபிசிஐடி போலீஸ் அறிக்கை
ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு அக்டோபர் 28ல் விசாரணைக்கு வந்தபோது, ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. 3 மாதம் அவகாசம் அளித்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சீலிடப்பட்ட கவர் தாக்கல்
இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாருக்கு டிசம்பர்18 வரை 2 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன் டிசம்பர் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரவி வாதிட்டனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான ரகசிய அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து சிபிசிஐடி எஸ்பி அமித்குமார்சிங் தாக்கல் செய்தார். அந்த கவர் பதிவாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு அறிக்கை நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
2 மாதம் அவகாசம்
இதனிடைய இன்று இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை வந்தது. அப்போது ராமஜெயம் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் இரண்டு மாதகாலம் அவகாசம் கேட்டார் சிபிசிஐடி எஸ்.பி அமித்குமார் சிங், இதனையடுத்து அவகாசம் வழங்கிய நீதிபதி வேணுகோபால், மார்ச் 5ம் தேதிக்கு ராமஜெயம் கொலை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
குற்றவாளி யார்?
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்று தெரியாமல் திண்டாடுகிறார்களா? அல்லது குற்றவாளி யார் என்று தெரிந்தும் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. 2016ம் ஆண்டிலாவது சிபிசிஐடி போலீசார் ராமஜெயம் குற்றவாளியை அடையாளம் காட்டுவார்களா? அல்லது அவகாசம் கேட்டு காலத்தை கடத்திவிடுவார்களா என்று ராமஜெயத்தின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விறுவிறுப்பு காட்டுவார்களா?
சிம்புவை தேட பல மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அதேபோல கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் வாட்ஸ் அப், டிவி பேட்டி என்று கொடுத்தும் சிபிசிஐடி போலீஸ் தடுமாறியது. தானாகவே வந்து யுவராஜ் சரணடைந்த பின்னர்தான் பிடித்து சிறையில் அடைத்தது போலீஸ். ராமஜெயம் கொலை வழக்கிலும் தன்னை கொன்றது யார் என்று ராமஜெயமே ஆவியாக வந்து யாரிடமாவது சொன்னால்தான் உண்டு. வருவாரா ராமஜெயம்.