ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு 6 வாரம் 'இறுதி அவகாசம்'
மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு இறுதியாக 6 வார கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்து 4- வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னமும் குற்றவாளிகள் யார் என கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கு விசாரணையை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை எனகூறி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்தனர்.ஆனால் அதற்கு நீதிபதி தேவதாஸ் மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் இறுதியாக 6-வார காலம் மட்டும் தான் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு அவகாசம் வழங்க முடியும்.
ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தத் தவறினால், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.