ராமஜெயம் கொலை: மீண்டும் சீலிடப்பட்ட கவர் தாக்கல் செய்த சிபிசிஐடி- மீண்டும் ஒத்திவைப்பு
மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில், சிபிசிஐடிக்கு வழங்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் சீலிடப்பட்ட கவர் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சிபிசிஐடிக்கு, மதுரை உயர்நீதிமன்றம், வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தற்போதைய அறிக்கையை சிபிசிஐடி எஸ்.பி. இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள், தி.மு.க அமைச்சர் நேருவின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான ராமஜெயம், 2012 மார்ச், 29ம் தேதி, கல்லணை சாலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை வழக்கை முதலில், திருச்சி மாநகர போலீசார், 12 தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
சிபிசிஐடி விசாரணை
ராமஜெயம் கொலை வழக்கு, அதே ஆண்டு ஜூன் மாதம், சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் சவாலாக எடுத்து விசாரித்தனர். சந்தேகப்படும்படியாக, 300க்கும் மேற்பட்ட மொபைல்போன் எண்கள் சோதனை செய்யப்பட்டது. இருந்தும் எந்த தடயமும், சிபிசிஐடி போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் வழக்கு விசாரணை மந்தமாகவே நடந்து வருகிறது.
குற்றவாளி யார்?
சம்பவம் நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. இந்த விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதால் வழக்கில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
அவகாசம் கேட்ட சிபிசிஐடி
இதன் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை கால அவகாசம் சிபிசிஐடி போலீசாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கு கடந்த அக்டோபர் 28ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என கூறப்பட்டது. அப்போது சிபிசிஐடி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பர் 18வரை கெடு
அறிக்கையை பார்த்த நீதிபதி நாகமுத்து வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்று கூறிய நீதிபதி நாகமுத்து, சிபிசிஐடிக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தங்களது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அப்போதைய நிலை குறித்த அறிக்கையை டிசம்பர் 18ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இறுதிக்கெடு
டிசம்பர் 18ம் தேதிக்குள் வழக்கு விசாரணை முடிக்கவில்லை என்றால், அன்றே, சிபிசிஐடி போலீசார் வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சிபிசிஐடிக்கு, மதுரை உயர்நீதிமன்றம், வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைந்தது.
ஜனவரி 5 வரை ஒத்திவைப்பு
3 மாதம் அவகாசம் முடிந்ததால் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி எஸ்.பி. அமித்குமார் சிங் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி வேணுகோபால் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளி யார்?
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னமும் குற்றவாளி யார் என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் சிபிசிஐடி போலீசார். 2016ம் ஆண்டிலாவது குற்றவாளியை கண்டுபிடித்து விடுவார்களா? அந்த ஸ்ரீரங்கநாதருக்கே வெளிச்சம்.