திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்
கடல் ஒருகிலோ மீட்டருக்கு மேல் உள்வாங்கி இருப்பதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ராமநாதபுரம்: திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி இருப்பதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரிக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் கடலுக்கள் யாரும் செல்ல வேண்டாம், கடலில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடலலையோ 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 18 மீனவ கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி காணப்படுகிறது. இதனால் கடல்நீர் எந்நேரமும் ஊருக்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலையில் மீனவ மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே, அறிவுறுத்தலையும் மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க முயன்றவர்களை ஒலிபெருக்க வாயிலாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி நீராடியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.