மழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத ரமணன்!
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இம்மாதம் 31ம் தேதியோடு தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஒருசிலரைத் தவிர பெரும்பாலும் திரைப் பிரபலங்களைப் போல, அரசு ஊழியர்கள் யாரும் ஊடகங்களிலோ, மக்கள் மத்தியிலோ பிரபலமடைவது இல்லை.
ஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினைவுக்கு வருபவராக, மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ரமணன்.
சென்னைக்காரர்...
ரமணன் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். விவேகானந்தா கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் படித்த ரமணன், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி, படித்த கையோடு, மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இயக்குநராக ஓய்வு...
இதனால், இந்திய வானிலை ஆய்வு துறையில், சீனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின் வேலை பார்த்துக் கொண்டே சென்னை பல்கலையில், பிஎச்.டி., முடித்து டாக்டர் ஆனார். இதன்பின், பல பதவி உயர்வு தேர்வுகளை எழுதி, இயக்குனராக பணி காலத்தை நிறைவு செய்கிறார்.
வானிலை அறிவிப்பு...
‘கண்டேன் சீதையை' என்ற ஸ்டைலில் ரத்தினச் சுருக்கமாக வானிலை அறிக்கையை கூறுவதில் வல்லவர் ரமணன். ரியாக்ஷன்களை முகத்தில் காட்டாத, வித்தியாசமான வானிலை உச்சரிப்பால் ரமணன் சினிமா, பட்டிமன்றம், சமூகவலைதளங்கள் என கிண்டல்களால் வறுத்தெடுக்கப்பட்டதும் உண்டு.
நம்பிக்கை தந்த மழை...
ஒருகாலத்தில் ரமணன் இன்னைக்கு மழை வரும்னு சொல்லியிருக்காரு, அப்போ நாம குடை எடுத்துட்டு போக வேணாம், கட்டாயம் மழை பெய்யாது' என்ற அளவிற்கு கிண்டல் செய்து வந்த மக்களுக்கு, கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளத்தோடு, ரமணன் மீதான நம்பிக்கையையும் சேர்த்து கொண்டு வந்தது எனலாம்.
குழந்தைகளின் ஹீரோ...
மழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என கொண்டாடின சமூகவலைதளங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக உயர்ந்தார் ரமணன். ‘மழை வரும்' என ரமணனின் வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வராதா என பள்ளிக் குழந்தைகள் தவமாய் தவமிருந்தன என்றால் மிகையில்லை. மீம்ஸ் மன்னராகவும் வலம் வந்தார் ரமணன்.
மழை நாளில் மகள் திருமணம்...
ஊருக்கெல்லாம் ‘மழை வரும் உஷாரா இருங்க' என உபதேசம் சொன்ன ரமணனும் மழையின் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. ஒரு மழை நாளில் தான் ரமணனின் மகள் திருமணம் நடைபெற்றது. எதிர்பார்த்த கூட்டமே வராமல் மண்டபம் காலியாகக் கிடந்தது.
வெள்ளத்திலும் சிக்கினார்...
இதேபோல், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, ரமணனும் வெள்ளத்தில் சிக்கினார். தியாகராய நகரில் அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் வெள்ளத்தில் மூழ்கவே, மீட்புப் படையினர் உதவியோடு பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார் ரமணன்.
பணியில் ஈடுபாடு...
புயல் நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக விடுமுறை நாட்களிலும், அலுவலகத்திற்கு வந்து வானிலை பற்றி ஊடகங்கள் வழியாக கூறி, தனது பணியில் உள்ள ஈடுபாட்டையும், மக்கள் நலனில் கொண்ட அக்கறையையும் நிரூபித்தவர் ரமணன்.
கலகலப்பானவர்...
வானிலை அறிக்கை வாசிக்கும்போது, உர்ரென்று இருக்கும் ரமணனிற்கு கலகலவென்ற ஜாலியான மற்றொரு முகமும் உள்ளது. குடும்பத்தார், உடன் பழகிய நண்பர்கள், பேட்டி எடுத்த செய்தியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.
சினிமா வாய்ப்பு...
மக்கள் மத்தியில் பிரபலமான ரமணனுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளும் வந்ததாக அவரே சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஓய்விற்குப் பின்னர் அவரை திரையில் நடிகராக பார்க்கும் வாய்ப்பு கிட்டினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
பணியில் ஓய்வு...
இப்படியாக மழை, வெயில் அறிவிப்புகளோடு ஒன்றிப் போன ரமணன், வரும் 31ம் தேதியோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று வானிலை பற்றிய தகவல்களை வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ரமணன்.
மீண்டும் மழை வரும். வெயில் அடிக்கும்.. புயல் வீசும்.. ஆனால் அதனை ரமணன் வாயால் கேட்க முடியாது... நினைக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.