நம்ம நவாஸ்கனியா இப்படி பேசியது... அதிருப்தியில் ராமநாதபுரம் திமுகவினர்
Recommended Video
சென்னை: ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனி, தமிழக அரசின் குடிமராமத்துப் பணிகளை பாராட்டி பேசியிருப்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நவாஸ் கனி. எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவரான நவாஸ்கனிக்கு சென்னை ராயபுரம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. அவ்வப்போது கட்சிக்கு நிதி மட்டும் கொடுத்துவிட்டு தனது தொழிலை கவனித்து வந்த நவாஸ்கனியை வேட்பாளராக்கினார் காதர் மைதீன்.
அரசியலுக்கு புதிதாக அதுவும் தேர்தல் அரசியலுக்கு முதல்முறையாக களத்திற்கு வந்த நவாஸ் கனிக்கு, கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்ற அடிப்படையில் பக்கபலமாக இருந்து ராமநாதபுரம் தொகுதியில் அவரை வெற்றிபெற வைத்தது திமுக. இந்நிலையில் திமுகவை நவாஸ்கனி துச்சமாக கருதுவதாக ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் புகார் கூறுகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த குடிமராமத்து திட்டப்பணிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி திமுக கண்டன அறிக்கை விடும் நிலையில், நவாஸ் கனி குடிமராமத்து திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்துள்ளார். இப்படி அவர் அளித்த பேட்டியை அதிமுக சேனலான நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டது.
இது ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளை கொதிப்படைய செய்திருப்பதோடு, வெற்றி பெற்று 3 மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இப்படி பேசுகிறார் என்றால், போகப்போக இன்னும் என்னென்ன பேசுவார் நவாஸ்கனி எம்.பி. என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.