இப்படியெல்லாம் சொன்னால் ராஜினாமா செய்துவிடுவேன்- காங் எம்எல்ஏ ராமசாமி கோபம்
சட்டசபையில் விரைந்து பேசுமாறு வற்புறுத்தினால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான் நான் பேச வேண்டும், விரைந்து பேச வற்புறுத்தினால் ராஜினாமா செய்வேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் ஏராளமான உறுப்பினர்கள் பேசினர்..
அப்போது சட்டசபை காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான ராமசாமி பேசுவதற்கு எழுந்தார்.அப்போது சபாநாயகர் தனபால் சீக்கிரம்பேசி முடிக்குமாறு கூறினார். இதனால் கோபமடைந்த ராமசாமி நான் பேச மாட்டேன் என்று கூறி உட்கார்ந்துவிட்டார்.
அவரை சபாநாயகர் மீண்டும் பேசுவதற்கு அழைத்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பின்வருமாறு:
ராமசாமி: எனக்கு ஒதுக்கிய நேரத்தில்தான் நான் பேச முடியும். 10 நிமிடம் என்றால் என்னால் முடியாது.
சபாநாயகர் தனபால்: நேரம் இல்லை. அதனால்தான் நான் அப்படி சொன்னேன். சபையை முடிக்க வேண்டுமல்லவா.
ராமசாமி: நேரம் கடத்தியது நீங்கள். நாங்கள் அல்ல. நேரம் கடந்து போனதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
சபாநாயகர்: சரி விரைந்து பேசுங்கள். நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது.
ராமசாமி: இப்படியெல்லாம் சொன்னால் நான் ராஜினாமா செய்துவிடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் ஒருவன்தான் பேசுகிறேன், 10 நிமிடத்தில் பேசுங்கள் என்றால் நான் என்ன பேசுவது.
சபாநாயகர்: சரி நீங்கள் பேசுங்கள்.
இப்படியாக இருவருக்குள்ளும் விவாதம் நடைபெற்றது.