திருமணத்தை பற்றி கேட்டதற்கு பத்திரிக்கையை வாட்ஸ்அப் செய்த ராமசாமி... சத்யப்பிரியா வேதனை!
சசிகலா புஷ்பாவுடனான திருமணம் பற்றி கேட்டதற்கு கணவர் ராமசாமி பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்ததாக பாதிக்கப்பட்ட சத்யப்பிரியா கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை : நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுடனான மறுமணம் பற்றி கேட்டதற்கு கணவர் ராமசாமி பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்ததாக பாதிக்கப்பட்ட சத்யப்பிரியா கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை மகப்பேறுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்தவர் பெண் குழந்தை பிறந்தது முதலே தன்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்றும் சத்யப்பிரியா தெரிவித்துள்ளார்.
ராமசாமியின் மனைவி சத்யப்பிரியா சசிகலா புஷ்பா - ராமசாமியின் மறுமணம் குறித்து கூறியதாவது : வருகிற 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஹாலில் சசிகலா புஷ்பாவிற்கும் என்னுடைய கணவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் மார்ச் 19ம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி இது குறித்து நான் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.
என்னுடைய கணவர் நான் இருக்கும் போதே எனக்குத் தெரியாமல் எப்படி வேறொரு திருமணத்தை செய்யலாம். நான் மகப்பேறுக்காக என்னுடைய தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளேன், என்னுடைய பெண் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்று நான் ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்கு பதிவு செய்தேன். நீதிபதி எனக்குரிய சட்ட பாதுகாப்பை அளித்துள்ளார், சசிகலா புஷ்பாவை மட்டுமல்ல எனக்கு ஒரு தீர்வு சொல்லாமல் ராமசாமி வேறு யாரையுமே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முதலில் மறுத்த ராமசாமி
இந்தத் திருமணம் குறித்து என்னுடைய கணவரை நான் தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை, இந்த சம்பவம் உண்மையா என்பதை நான் குறுந்தகவல் மூலம் கேட்டேன். அதற்கு அவர் இதில் உண்மை இல்லை என்று தான் முதலில் சொன்னார்.
பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்த ராமசாமி
தான் சசிகலா புஷ்பாவிடம் வேலை மட்டுமே பார்ப்பதாக முதலில் கூறினார். அப்படியானால் சசிகலா புஷ்பாவின் கணவரே இருவரின் திருமணம் உண்மைதான் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கேட்டேன். அதற்கு பதிலாக எனக்கு திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்தார்.
கருத்து வேறுபாடில்லை
கட்டிய மனைவிக்கே திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறீர்களே இது சரிதானா என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, அவரே தான் என்னை மகப்பேறுக்காக அனுப்பி வைத்தார். பெண் குழந்தை பிறந்தது முதலே அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் தந்தை வீட்டில் தான் இருக்கிறேன்.
நம்பரை பிளாக் செய்துவிட்டார்
6 மாதமாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை, 3 மாதமாக தொலைபேசி, குறுந்தகவல்கள் கூட கிடையாது. இப்போதும் கூட என்னுடைய சகோதரியின் செல்போன் எண்ணில் இருந்து தான் வாட்ஸ் அப் செய்தேன். திருமண பத்திரிக்கையை அனுப்பிய கையோடு அந்த எண்ணையும் ராமசாமி பிளாக் செய்துவிட்டதாக சத்யப்பிரியா கூறியுள்ளார்.