ஜெ.மரணத்தில் சர்ச்சை கிளப்பிய ராமசீதா - ஜாமீன் கிடைப்பது போலீஸ் கையில் இருக்கு!
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராமசீதாவின் ஜாமீன் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை நீதிமன்றம் ஒருவாரம் கால அவகாசம் அளித்துள்ளது.
சென்னை : ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ராமசீதாவின் ஜாமீன் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளது சென்னை நீதிமன்றம்.
ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இறக்கும் வரை அவரது உடல்நிலை குறித்து மர்மமாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம சீதா, தான் அப்பல்லோ மருத்துவர் என்றும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட அழைத்து வரப்பட்டபோதே ஜெயலலிதா இறந்திருந்தார் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பல்லோ நிர்வாகம், ராம சீதா தங்களுடைய மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது.
புகாரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்த போலீஸார் பெரம்பூரில் ஒரு வீட்டில் இருந்த சீதாவை கடந்த சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் என்றும், பி.எஸ்சி. நியூட்ரீசியன் பட்டம் மட்டுமே பயின்றவர் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சீதா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமசீதாவின் ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்படுவதாகவும், இந்த வழக்கு மீண்டும் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.