ரம்பா உடன் சேர்ந்து வாழ கணவர் இந்திரன் சம்மதம் - விவாகரத்து வழக்கில் சமரசம்
நடிகை ரம்பா உடன் சேர்ந்து வாழ அவரது கணவர் இந்திரன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடிகை ரம்பா உடன் அவரது கணவர் இந்திரன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். சேர்ந்து வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி மனுத்தாக்கல் செய்ததை அடுத்து விவகாரத்து வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரை உலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரம்பாவின் ரசிகர்கள்
சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியதால் ரம்பாவிற்கு தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடம் கிடைத்தது. ரம்பாவிற்கு தனி ரசிகர்கள் வட்டம் உருவானது.
இந்திரனுடன் திருமணம்
சினிமா வாய்ப்புகள் படிப்படியாக குறையவே, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
கருத்து வேறுபாடு
ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். டிவி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டத் தொடங்கினார்.
இதனிடையே, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் ரம்பா. அதில், இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கணவர் மனு தாக்கல்
அதே நேரத்தில் ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரியிருந்தார் இந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன்-மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. இதன்பின்னர் விவாகரத்து வழங்கவதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது.
சேர்ந்து வாழ சம்மதம்
இந்நிலையில், வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ரம்பா-இந்திரகுமார் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.