டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை : டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுப்பது அதன் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழக காவல்துறையில் கடந்த ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி 21,110 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சத்து 20,996 பேர் இருக்கவேண்டிய காவல்துறையில் 99,896 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதாவது 750 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளார். காலியிடங்களை நிரப்புவதில் மட்டுமின்றி, பதவி உயர்வு வழங்குவதிலும் தாமதம் செய்யப்படுகிறது.
2011-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 9 ஆயிரம் கொலைகளும், 88 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திருட்டு, கொள்ளைகளும் நடந்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள், பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவை காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், குற்றங்கள் அதிகரிப்பது குறித்த தகவல்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக இணையதளத்தில் அந்த புள்ளி விவரங்களை வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது.
ஏற்கனவே இருந்த தகவல்களையும் அகற்றி விட்டது. மிகவும் சிக்கலான வழக்குகளைக்கூட எளிதாக துப்புதுலக்கிய தமிழக காவல்துறை சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்று நம்பும் நிலைக்கு வந்திருப்பது அவலம் தான். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மர்மங்களை விலக்க வேண்டுமானால் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுப்பது அதன் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் தமிழக காவல்துறையை பற்றி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. காவல்துறையினரின் திறமையோ, நேர்மையோ குறைந்துவிட்டதாக கூற முடியாது. அவர்களை வழிநடத்துபவர்கள் தான் இத்தனை அவலத்திற்கும் காரணம். அவர்களை வரும் தேர்தலில் மக்கள் தண்டிப்பர் என்பது நிச்சயம்.
இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.