ஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் ?: ராமதாஸ் கேள்வி
ஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் எதற்கு உருவப்படம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
ஈரோடு : சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தால் தமிழக சட்டசபையின் புனிதம் கெட்டுவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறியும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து இருப்பது, மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
ஊழல் குற்றவாளி ஜெயலலிதா
மேலும் சட்டசபையில் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதா உருவப்படத்தை அவசர அவசரமாகத் திறந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. அப்படியே ஜெயலலிதா இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப்பார். ஊழல் செய்ததற்காக அவர் இரண்டு முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டு முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல.
ஜெயலலிதா படம் இருக்கக்கூடாது
சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது. ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் அந்தத் தலைவர்களின் படத்தையாவது அங்கிருந்து அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக்கூடாது.
கோவை பல்கலைக்கழக ஊழல்
தமிழக அரசின் 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அதை நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம். விரைவில் அவரை சந்தித்து பேசவும் உள்ளோம். பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதால் தான் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது.
மத்திய அரசின் கவனம் தேவை
மத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நடக்கவில்லை. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.