”தென்னிந்திய காசி” ராமேஸ்வரத்தில் நாளை குடமுழுக்கு விழா- குவிந்துவரும் பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் 12 ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள கோவில்களில் ஒன்றாகவும் ராமேஸ்வரம் கோவில் விளங்குகிறது. காசிக்கு நிகராகவும் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி.
நாளை குடமுழுக்கு:
இந்தநிலையில் ராமேஸ்வரம் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 5 நிலைகளுடன் 91 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு பகுதியில் இரண்டு கோபுரங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
யாக பூஜை துவக்கம்:
இந்த 2 கோபுரங்களுக்கும் சேர்த்து நாளை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது மேலும் சிறப்பாகும். ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 16 ஆம் தேதி மாலை முதல்கால யாக பூஜை தொடங்கியது.
மகாதீப ஆராதனை பூஜைகள்:
தொடர்ந்து அடுத்தடுத்து நாட்களில் 2வது, 3வது கால யாகபூஜைகள் நடந்தன. 3வது நாளான நேற்று காலை 9 மணி முதல் 2 மணி வரை யாகசாலை மண்டபத்தில் 4வது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு 5வது கால யாகபூஜை தொடங்கி இரவு 8.30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், சிறப்பு மகாதீப ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன.
குவிந்து வரும் பக்தர்கள்:
பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகிறார்கள்.
திருக்கல்யாண உற்சவம்:
இரவு 7 மணியளவில் தெற்கு கோபுரம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் 5 நிலைகளுடன், 91 அடி உயரத்தில் புதிதாக வடக்கு, தெற்கு என இரண்டு கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சிறப்பு பூஜைகளுடன் வடக்கு கோபுரத்தில் 5 அடி உயரத்தில் புதிதாக 5 கலசங்களும், தெற்கு கோபுரத்தில் புதிதாக 5 கலசங்களும் பொருத்தப்பட்டன.