மீனவர்கள் சாலை மறியலுக்கு சன் டிவி , புதிய தலைமுறை நிருபர்களே காரணமாம்- டி.எஸ்.பி. சம்மன்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சாலை மறியல் போராட்டம் நடத்துமாறு சன் டிவி மற்றும் புதிய தலைமுறை நிருபர்கள்தான் தூண்டிவிட்டனர் என்றும் இது தொடர்பான வழக்கில் ஏன் உங்களை சேர்க்கக் கூடாது என்றும் டி.எஸ்.பி. விஜயகுமார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடந்த மாதம் 26-ந் தேதி காணாமல் போயினர். இதனைத் தொடர்ந்து மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் மொத்தம் 520 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் புதிய தலைமுறை செய்தியாளர் ஆனந்தனுக்கு டி.எஸ்.பி. விஜயகுமார் ஒரு சம்மனை அனுப்பியுள்ளார்.
அந்த சம்மனில், மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நீங்களும், சன் டிவி நிருபர் கார்த்திக்கும் இந்த விவகாரம் பெரிதாக வேண்டுமெனில் பஸ்மறியல் அல்லது வேறு ஏதாவது ஒரு பெரிய போராட்டம் நடத்தினால் நாங்களும் டிவியில் பெரிய அளவில் ஒளிபரப்புவோம் என்று கூறி மீனவர்களை தூண்டியதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் உங்களையும் ஏன் சேர்க்கக் கூடாது. இந்த அறிவிப்பு கிடைத்த 5 நாட்களுக்குள் தகுந்த விளக்கத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது செய்தியாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் செய்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சென்னையில் போலீஸ் செய்தியாளர்களை கண்காணிக்க காவல்துறை ஆணையாளர் அமைத்த அதிகாரிகள் குழு குறித்தும் இந்த சந்திப்பின் போது முறையீடு செய்யப்பட்டது.