3-வது நாள் ஸ்டிரைக்கில் ராமேஸ்வர மீனவர்கள்.. வெறிச்சோடியது மீன்பிடி துறைமுகம்!
3-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம்மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி துறைமுகமே வெறிச்சோடி உள்ளது.
எப்போதுமே சிறைபடுத்தப்பட்ட மீனவர்களை விடுவித்தாலும் இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில்லை.
புதிய மீன்பிடி சட்டம்
இப்போதும், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களின் 192 விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் அரசுடமையாக்கப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மீனவ பிரதிநிதிகள் முடிவு
எனவே இலங்கையின் இந்த அவசர சட்டத்தினை ரத்து செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என 11 மீனவ சங்கத்தின் தலைவர்களும் மற்றும் நிர்வாகிகளும் முடிவெடுத்தனர்.
3-வது நாளாக நீடிப்பு
அதன்படி இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடவே, டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.
வெறிச்சோடிய துறைமுகம்
தொடர்ந்து 3-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகமே வெறிச்சோடி உள்ளது.