அகதிகளாய் வந்த 5 இலங்கைத் தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 5 தமிழர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் துவங்கியுள்ள ராணுவ கெடுபிடிகளை தாக்கு பிடிக்க முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். இதனால், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் தமிழர்களை, இலங்கை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.அதனால் சட்ட விரோதமான முறைகளில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதில், பெரும் பகுதி தமிழர்கள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளுக்கு செல்வதையே விரும்புகின்றனர். அவ்வாறு செல்ல முயல்பவர்களில் பலர் இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொள்கின்றனர். இன்னும் சிலர், இயற்கை சீற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இலங்கை முல்லை தீவு பகுதியில் இருந்து 3 ஆண்கள், 2 பெண்கள், 5 குழந்ந்தைகள் உட்பட 10 பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு அகதிகளாக வந்தனர். தமிழக போலீஸாரிடம் சரணடைந்த இவர்களிடம், நேற்று இரவு வரை மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில், அகதிகளாக வந்தவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ்சுதாகர், ரமேக்கா ஆகியோர் போலீஸார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரையும் இம்மாதம் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அகதிகள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை அரசு தமிழ் அமைப்புகள் மீது விதித்துள்ள தடையினை இந்திய அரசு ஏற்று கொண்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வந்தவர்கள் மீது பாஸ்போர்ட் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாரின் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.