மீனவர் படுகொலை: சிங்கள அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டம்
தமிழக மீனவர் படுகொலைக்கு காரணமாக இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் பிரிட்சோவை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் கொலைவெறியைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 4 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை கண்மூடித்தனமான துப்பாக்கிக் குண்டு மழை பொழிந்தது. தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்த போது இந்த கொலைவெறித்தனத்தில் சிங்கள கடற்படை ஈடுபட்டது.
இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது இளைஞரின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டுவர மீனவர்கள் முயற்சித்தனர். ஆனால் நடுக்கடலிலேயே பிரிட்சோ உயிரிழந்து போனார்.
2011-ம் ஆண்டுக்குப் பின்னர் மீனவர் படுகொலைகளை நிறுத்தி வைத்த சிங்கள கடற்படை தற்போது வெறியாட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த படுபாதக படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.