அரபு நாடுகளில் இன்று.. தமிழகத்தில் நாளை ரமலான் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்றுடன் நிறைவடைவதால் திங்கட்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிறை தோன்றவில்லை.
இதையடுத்து, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் இன்று ஈதுல் பித்ர் எனப்படும் ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என மேற்கண்ட நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏமன், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இன்று ரமலான் பண்டிகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 7ம் தேதி அதாவது நாளை, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வானில் பிறை தென்படவில்லை என்பதால் நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.