ராம்குமாருக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையமே தெரியாது என்றும் சொல்வார்கள்... நெல்லை டிஐஜி
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் உலா வரும் நிலையில், ‘இன்னும் சில நாட்கள் போனால், ராம்குமாருக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையமே தெரியாது என்றும் சிலர் சொல்வார்கள்' எனத் தெரிவித்துள்ளார் நெல்லை டிஜஜி தினகரன்.
கடந்த மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் இன்போசிஸ் ஊழியர் சுவாதி. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடைபெற்று சுமார் எட்டு நாட்களுக்குப் பின், நெல்லை அருகே ராம்குமார் என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
கைது சம்பவத்தின் போது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. கழுத்தில் காயத்துடன் அவர் சிகிச்சைக்காக நெல்லையிலும், பின்னர் சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே ராம்குமாரின் வாக்குமூலம் என பல்வேறு தகவல்கள் வெளியாயின. ஒருதலைக் காதலால் இந்தக் கொலை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
ஆனால், ராம்குமார் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இதற்கு முரணான தகவல்களைக் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, போலீசாரே ராம்குமாரின் கழுத்தை அறுத்தனர் என்றும், அவர் நிரபராதி என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நெல்லை சரக காவல்துறை டிஐஜி தினகரன் விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதேப்போன்று ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது அவரேதான் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. இன்னும் சில நாட்கள் போனால், ராம்குமாருக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையமே தெரியாது என்றும் சிலர் சொல்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சுவாதி வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் கைது செய்யச் சென்றபோது பயந்து போய், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது உண்மை. வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இவ்வாறு சொல்வது காலம்காலமாக நடந்து வருகிறது. இதற்கு மேலும், அவர்களின் புகார் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்கிறார்.