ராம்குமாருக்கு பாளை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... சுவாதியை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம்
நெல்லை: சென்னையில் பொறியாளர் சுவாதியை படுகொலை வழக்கில் சிக்கி தற்கொலைக்கு முயன்ற கொலையாளி ராம்குமாருக்கு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சுவாதியை தாம் கொன்றதாக ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடந்த ஒரு வார காலமாக கொலையாளி யார் என்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டம் பண்பொழில் கிராமத்தில் உள்ள ராம்குமார் வீட்டை நேற்று இரவு 10 மணியளவில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது திடீரென ராம்குமார் பிளேடால் 10 இடங்களில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி முதலில் தென்காசி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சில மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் ராம்குமார் பேச தொடங்கினார். அப்போது போலீசாரிடம் சுவாதியை தாம் கொன்றதாக ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
சென்னையில் கைப்பற்றப்பட்ட கத்தியில் உள்ள கைரேகையும் ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, கத்தியில் இருந்த கைரேகைப் பதிவுடன் சென்னையில் இருந்து டி.எஸ்.பி. தேவராஜ் பாளையங்கோட்டை சென்றுள்ளார்.
இதனிடையே ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.